ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில், அந்நாட்டின் விடுதலை ஜனநாயக கட்சி வெற்றிபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற மேல்சபை தேர்தலுக்கான பிரசாரத்தில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஈடுபட்டார். அப்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஷின்சோ அபே ஆளும் விடுதலை ஜனநாயக கட்சிக்கு சார்பாக பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், ஜப்பான் நாட்டின் நாடாளுமன்ற மேல்சபைக்கான தேர்தல் நேற்றைய முன்தினம் நடைபெற்றது.
பலத்த பாதுகாப்புக்கு இடையேதான் இந்த தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவடைந்த நிலையில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது நேற்றுத் தொடங்கியது.
அதன்படி, மொத்தம் உள்ள 248 இடங்களில் 146 இடங்களுக்கு மேல் விடுதலை ஜனநாயக கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின. சில மணி நேரங்களில் அந்த கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தேர்தலுக்கு முன்பே, ஆளும் விடுதலை ஜனநாயக கட்சி வெற்றிபெறும் என்று கருத்துகணிப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.