ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்ய பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கொண்டார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும். மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. மனுக்கள் மீதான விசாரணை அடுத்த வாரம் வர உள்ளது.
இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசின் சார்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், உச்ச நீதிமன்ற வழக்கின் தன்மை குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் செய்யப்பட வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை! ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்த நடிகை குஷ்பு