தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திமுக அரசு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பாண்டில் ஆவின் நிறுவனம் இரண்டாவது முறையாக நெய்யின் விலையை மீண்டும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் நெய்யின் விலை 580 ரூபாயில் இருந்து 630 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதே போல் ஒரு லிட்டர் ப்ரீமியம் நெய்யின் விலையை 630 ரூபாயில் இருந்து 680 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மேலும் 5 லிட்டர் நெய் பாட்டிலின் விலை 2,900 ரூபாயில் இருந்து 3,250 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு, இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியதன் விளைவாக அதன் விற்பனை சரிந்தது.
தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு?
இவ்வாறு அவர், கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே ஆவின் நெய் விலை உயர்வுக்கு அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக்கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல். ஒரே ஆண்டில் மூன்று முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115/- வரை அதிகப்படுத்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. இதுதான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா? என கேள்வி கேட்டுள்ளார்.