அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையாகிய பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2021-ம் ஆண்டுச் சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.
ஆட்சிக்கு வந்த உடனேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றிப் பிடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை என்று கடந்த மே மாதம் சட்டசபையிலேயே அறிவித்து, நம்ப வைத்து கழுத்தை அறுத்தது தி.மு.க.வின் ‘திராவிட மாடல்’ அரசு.
எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.
எனவே, தி.மு.க. அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, தங்களின் உழைப்புக்கான வாழ்வாதார உரிமைக்காக 20 ஆண்டுக் காலமாகப் போராடி வரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையாகிய பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எதையும் வாங்காதீர்கள்..பணத்தை சேமியுங்கள்’ – அறிவுரை கூறிய உலக பணக்காரர்…