Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்படித்தால் தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை முழுமையாக அறியலாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    படித்தால் தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை முழுமையாக அறியலாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    படித்தால் தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை முழுமையாக அறியலாம் என
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று (15.12.2022) சென்னை, மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு மாநாடு மற்றும் இசை விழாவை தொடக்கவைத்து
    உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

    இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் இருக்கக்கூடிய இசைக்கலை மன்றங்களில் மிக முக்கியமானதாக இருக்கக் கூடியது இந்த மியூசிக் அகாடமி! இசைக்கு மாபெரும் வரலாறு உண்டு. அத்தகைய வரலாற்றில் மியூசிக் அகடாமிக்கு ஒரு தனி இடம் உண்டு. இந்த விழாவைப் பொறுத்தவரைக்கும் நான் வந்திருக்கிறேன் என்றால், முதலமைச்சர் என்ற அந்த அடிப்படையில் நான் வருகை தந்திருப்பதாக மட்டும் நீங்கள் கருத வேண்டியதில்லை. இசை ஆர்வலன் – இசை ரசிகன் என்ற அடிப்படையில்தான் நானும் வருகை தந்திருக்கிறேன். அதற்காக, நான் இசைக் கலைஞரோ – இசை அறிஞரோ அல்ல. என்னுடைய தாத்தா முத்துவேலர் அவர்கள் ஒரு இசைவாணர். பாடல்கள் எழுதுவதில் மட்டுமல்ல, பாடல்கள் பாடுவதிலும் வல்லவராக இருந்திருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் இசை கற்க சென்றார்களே தவிர தொடர்ச்சியாகக் அதைக் கற்றுக் கொள்ளவில்லை. இசை ஞானம் அதிகம் கொண்டவராக முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் இருந்தார்கள். ஆனால் எனக்கு பேச்சுக் கச்சேரி பண்ணத் தெரியும் – பாட்டுக் கச்சேரி தெரியாது. ஒரு காலத்தில் மேடைப் பேச்சுகளையும் கச்சேரி என்றுதான் சொல்வார்கள், வயதில் மூத்தவர்கள் அதை நன்கு அறிவார்கள் என்று நான் நம்புகிறேன்.

    பாட்டுக் கச்சேரிக்கு இசைக்கலைஞர்களிடம், சக்சேரி நடத்துவதற்கு பல மாதங்களுக்கு முன்கூட்டியே தேதி வாங்கிவிடுவார்கள். அதனால்தான், முரளி அவர்களும் என்னிடம் பல மாதங்களுக்கு முன்பே சந்தித்து என்னிடத்தில் தேதியை வாங்கிவிட்டார். நான்கைந்து மாதங்களுக்கு முன்பு வாங்கிய தேதியாக இருந்தாலும், நானும் ஒப்புக்கொண்டபடி மறக்காமல் இந்த நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்திற்கு வந்திருக்கிறேன். நான் தினந்தோறும் இந்து நாளிதழ் நிறுவனத்தை நினைக்கிறேன், நினைத்துக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு நாளும் நினைப்பேன். அதை முரளி அவர்களுக்குச் சொல்வதற்கான மேடையாகவும் இதனை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

    தினமும் காலையில் உங்களது நிறுவன நாளிதழ்களை தொடர்ந்து படிக்கிறேன் என்பது மட்டுமல்ல, எனக்கு அன்பளிப்பாக தினமும் வழங்கப்படும் புத்தகங்களில் பெரும்பாலும் தரப்படுவது எது என்றால், இந்து குழுமத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கக்கூடிய பேரறிஞர் அண்ணா பற்றிய ‘மாபெரும் தமிழ்க்கனவு’ என்ற புத்தகமும், தலைவர் கலைஞர் பற்றிய ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்ற புத்தகமும்தான். அதனால்தான் இந்து நிறுவனத்தை நான் தினமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு நன்றி தெரிவிக்கக்கூடிய மேடையாகவும் இதனை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். தனியாக இதற்கு ஒரு விழா நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு முரளி கொடுத்திடவில்லை.

    மரியாதைக்குரிய முரளி அவர்களுக்கு இந்து நாளிதழ் இயக்குநர் என்பது ஒரு அடையாளம் என்றால் மியூசிக் அகாடமி என்பது இன்னொரு அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு இந்த அமைப்புடன் தன்னை உணர்வுப்பூர்வமாக, உளப்பூர்வமாக இணைத்தும் – பிணைத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடியவர். ஆண்டுதோறும் மார்கழி மாதம், அதாவது டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல – உலகம் முழுவதும் உள்ள இசைப் பறவைகளை சென்னையை நோக்கி வரவழைக்கக்கூடிய ஒரு வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி இன்று செயல்பட்டு வருகிறது. இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல்.

    கலை வளர்த்தல் என்பது பண்பாட்டை வளர்த்தல். பண்பாட்டை வளர்த்தல் என்பது நமது நாகரிகத்தை வளர்த்தல். அந்த வகையில் மக்கள் மனதையும், இந்த மாநிலத்தையும் பண்படுத்தும் கடமையை இது போன்ற இசைக் கலை மன்றங்கள் செய்து வருவது மிகப்பெரிய தொண்டு. மியூசிக் அகாடமி உள்ளிட்ட இசைக் கலை அமைப்புகளை ஏதோ பொழுதுபோக்கு அமைப்புகளாகச் சொல்ல முடியாது. அவை அனைத்தும் கலை வளர்க்கக்கூடிய பண்பாட்டு அமைப்புகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இந்த மாபெரும் விழாவில் சங்கீத கலாநிதி விருதினைப் பெற்றிருக்கக்கூடிய
    இசைக் கலைஞர் நெய்வேலி ஆர்.சந்தானகோபாலன் ,மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் ,வயலின் கலைஞர்கள் லால்குடி ஜி.ஜெ.ஆர். கிருஷ்ணன்,
    ஜி.ஜெ.ஆர். விஜயலட்சுமி சங்கீத கலா ஆச்சார்யா விருதினைப் பெற்றுள்ள
    நாகஸ்வர வித்வான் கீவளூர் என்.ஜி.கணேசன், இசை அறிஞர் ரீதா ராஜன்,
    இசை அறிஞர் ஆர். எஸ். ஜெயலட்சுமி, டி.டி.கே விருதைப் பெற்றுள்ள, இசைப் பாடகர் தாமரைக்காடு கோவிந்தன் நம்பூதிரி, மிருதங்க வித்வான் சோமயாஜுலு, கஞ்சிரா வித்வான் ஏ.வி.ஆனந்த், இசை அறிஞர் விருது பெற்றுள்ள வி.பிரேமலதா நிருத்ய,  கலாநிதி விருது பெற்றுள்ள ரமா வைத்தியநாதன், முனைவர். நர்த்தகி நடராஜ் (தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர்) ப்ரெகா பெசல் – ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பில், தமிழ்நாட்டின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    இசையுலகின் மிகப்பெரிய விருது மியூசிக் அகாடமி விருது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிவீர்கள். அத்தகைய உயரிய விருது பெற்றுள்ள நீங்கள் அனைவரும் தொடர்ந்து இசைத்துறைக்கு தொண்டாற்றி உங்களைப் போன்ற திறமைசாலிகளை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இயல், இசை, நாடகம் என்று முத்தமிழைப் பிரிப்பார்கள். இந்த முத்தமிழில் முதலில் பிறந்தது நாடகம்தான் என்று முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள். ஆதிமனிதனின் முதல் மொழி சைகையே. அதனால்தான் முதலில் பிறந்தது நாடகம். அவனது ஒலிக்குறிப்புகள் இசையை உருவாக்கியது. அதன் பிறகுதான் எழுதக் கற்றுக் கொண்டான். அந்த வகையில் நாடகம் – இசை – இயல் என்பதே சரியான வரிசை என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். இத்தகைய இசைத்தமிழ் தொல்காப்பியர் காலத்துக்கும் முன்பிருந்தே நம்முடைய தமிழ் மரபில் உள்ளது.

    எழுத்து ஒலிகளின் பிறப்பையே காற்றில் இருந்து எழும் இசையாகக் கருதும் அளவுக்கு தமிழர் இசை அறிவு இருந்தது. அந்த வகையில் தமிழர்களின் இசை மரபு என்பது பழமையானது! செழுமையானது! சிலப்பதிகாரம் என்ற தமிழ்க் காப்பியமே இசைக்காப்பியம்தான்.

    சங்க காலம், காப்பிய காலம், பக்திக்காலம் முதல் இசையானது நமது தமிழ் மண்ணில் புதுப்புது பொலிவோடு சிறந்து விளங்கியது. தேவாரமும், திருவாசகமும்
    நாலாயிர திவ்வியப் பிரபந்தமும், பெரியபுராணமும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் படித்தால் தமிழுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பை முழுமையாக அறியலாம். ‘இசை என்பது காதுகளுக்குப் போர்த்தி விடுகின்ற கவுரவப் பொன்னாடை’ என்று கவிஞர் மு.மேத்தா அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தகைய கவுரவப் பொன்னாடை போர்த்தும் அரங்கம்தான் இந்த மியூசிக் அகாடமி.

    பொதுவாக முதலமைச்சரிடம்தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் நான் இங்கே உங்களுக்கு, இசைக் கலைஞர்களுக்கு கோரிக்கை வைப்பது காலத்தின் தேவை என்று நான் கருதுகிறேன். இன்றைய நாள் இந்து தமிழ் திசை நாளிதழில் பேட்டி அளித்திருக்கிறார் நம்முடைய மியூசிக் அகாடமியின் தலைவர் முரளி அவர்கள். நான் காலையில் படித்தேன். தனது கொள்கையை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். எங்களின் விழாக்களின் மூலமாக வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறோம் என்று முரளி அவர்கள் சொல்லி இருக்கிறார். இந்தக் கருத்துதான் இன்று நாட்டுக்குத் தேவையான கொள்கை.

    இந்தக் கொள்கை ஏதோ அரசியல் கட்சிகள் மட்டும் அல்ல, அரசியல் கட்சிகள் மட்டும் வலியுறுத்துவதாக நீங்கள் சுருக்கி அதை நினைத்துவிடக் கூடாது. இதுபோன்ற கலை அமைப்புகளின் கொள்கையாக – ஒவ்வொரு தனிமனிதரின் கொள்கையாக மாற வேண்டும்; எதிரொலிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் மியூசிக் அகாடமி போன்ற இசைக்கலை அமைப்புகளும், மன்றங்களும் தமிழிசைக்கு, தமிழ்ப்பாடல்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ் இலக்கியத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. அந்தப் பாடல்களும் இதுபோன்ற இசை மன்றங்களில் தவறாது ஒலிக்க வேண்டும்.

    பக்தி இசையாக இருந்தாலும், திரையிசையாக இருந்தாலும் மெல்லிசையாக இருந்தாலும், பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும் – தமிழிசையாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்று இங்கே கேட்டுக்கொள்கிறேன். மொழி இருந்தால்தான் கலை இருக்கும். இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல் மட்டுமல்ல தமிழ் வளர்த்தலும்தான் என்பதை மனதில் அனைத்துக் கலைஞர்களும், அனைத்து கலை அமைப்புகளும் செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து, இந்த சிறப்பான இனிய நிகழ்ச்சியில் நான் ஆட்சிப் பொறுப்பேற்று எந்தவித பிரச்சனையில்லாமல், எந்தவித பரபரப்பும் இல்லாமல், ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால், எந்த டென்ஷனும் இல்லாமல், ஒரு நிகழ்ச்சியிலே கலந்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னால், அது இந்த நிகழ்ச்சியாகத்தான் அமைந்திருக்கிறது என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி இந்த நல்ல வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்திருக்கக்கூடிய மியூசிக் அகாடமியினுடைய நிர்வாகிகளுக்குக் குறிப்பாக நம்முடைய திரு.முரளி அவர்களுக்கு என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்து நிறைவு செய்கிறேன்.

    தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்து; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....