Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்து; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்து; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
    உதயநிதி ஸ்டாலின் ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கிடையே ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்து, ஊக்கப்பரிசுகளை வழங்கினார்.

    ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கிடையே ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்கும் மாணவர்களுடன் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று (15.12.2022) நேரு விளையாட்டரங்கத்தில் கலந்துரையாடி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்து, ஊக்கப்பரிசுகளை வழங்கினார்.

    பழங்குடியினர் இன மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் பொருட்டு, தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளியில் 2022 – 2023ஆம் கல்வியாண்டில் 2,606 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

    மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் பொருட்டும், விளையாட்டில் முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி மகாபலிபுரத்தில் நடைபெற்றதையொட்டி, பழங்குடியினர் நலத்துறைப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு, 100 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 31.07.2022 அன்று நடத்தப்பட்டது.

    இம்மாணவர்கள் ரஷ்ய நாட்டைச் சார்ந்த கிராண்ட் மாஸ்டர் அவர்களுடன் விளையாடும் வாய்ப்பு பெற்றனர். பங்குபெற்ற 100 மாணவர்களுக்கும் மகாபலிபுரத்தில் நடைபெற்ற 44வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டியினை நேரில் காணும் வாய்ப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டது. ஏகலைவா பள்ளிகளுக்கிடையே 2018-2019ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான முதலாவது விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு 6வது இடம் பெற்றது.

    இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் 2 தங்கம், 9 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். 2019-2020ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசம் மாநிலம், போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான இரண்டாவது போட்டியில் தமிழ்நாடு 7வது இடம் பெற்று, 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 17 வெண்கலப் பதக்கங்களை வென்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டி நடைபெறவில்லை.

    2022-2023ஆம் ஆண்டில் தேசிய அளவிலான மூன்றாவது போட்டி 17.12.2022 முதல் 22.12.2022 வரை ஆந்திர மாநிலம், குண்டூரில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 25 மாநிலங்களிலிருந்து 4,336 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். நம்முடைய தமிழ்நாட்டில் இருந்து 94 மாணவர்கள் மற்றும் 83 மாணவியர் என 177 மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.

    நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருடன் கலந்துரையாடிய மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது,

    தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள மாணவர்கள், இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து, அதன் மூலம் அவர்களின் திறமையை மேம்படுத்த சந்தர்ப்பம் அளிப்பதற்கும், போட்டியில் சிறந்து விளங்கும் நாட்டத்தினை மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து கவனம் செலுத்தும்.

    ஏகலைவா பள்ளிகளுக்கிடையேயான மூன்றாவது தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தின் சார்பில் 14.11.2022 முதல் 13.12.2022 வரை சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

    விளையாட்டுத் துறையின் சார்பில் மாணவ, மாணவியருக்கு நவீன தங்கும் வசதி, தரமான உணவு, தரமான பயிற்சி உபகரணங்கள் மற்றும் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு தனிக்கவனம் செலுத்தி, கபடி, கையுந்து பந்து, கோ-கோ, கால்பந்து, கைப்பந்து, நீச்சல், குத்துச்சண்டை, சதுரங்கம் போன்ற குழு விளையாட்டுப் போட்டிகளிலும், ஓட்டப்பந்தயம், தட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடரோட்டம் போன்ற தடகளப் போட்டிகளிலும் சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ச.அண்ணாதுரை, இணை இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது- அன்புமணி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....