பொதுத்துறை நிறுவனங்களை அரசால் நிர்வகிக்க முடியாத போது, தனியாருக்கு விற்கப்படும். இந்நிலையில் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறதா என்ற தன்னுடைய ஐயப்பாட்டைக் காணொளி வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் நிறுவனத் தலைவர் சு. ஆ. பொன்னுசாமி.
சென்னையில் உள்ள அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாகவே தொழிலாளர்கள் பிரச்சனை காரணமாகப் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விநியோகத்திலும் பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன.
இதனை தொடர்ந்து பால் முகவர்கள் கடுமையான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமில்லாமல், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில், தொழிலாளர் பிரச்சனை காரணமாக 4 மாதங்களுக்கு மேலாகப் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பால் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் ”தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகிறதோ என்ற மிகப்பெரிய சந்தேகம் தற்போது எழுந்திருக்கிறது.
மேலும், இதன் முதற்கட்டமாக கோவையில் ஆவின் பால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக 133 முகவர்களின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மளிகைக் கடைகளுக்கே நேரடியாக உரிமத்தைக் கொடுக்கப் போவதாகவும், மளிகைக் கடைகளுக்கு விநியோகம் செய்யக்கூடிய உரிமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்குக் கொடுக்கப் போவதாகக் கோவையில் இருக்கக் கூடிய பொது மேலாளர் ராமநாதன் தெரிவித்து இருக்கிறார். இவரது பேச்சுக்கு ஏற்றவாறு தற்போது ஆவின் நிறுவனத்தின் செயல்பாடும் அமைந்து உள்ளது.
மேலும் நேற்று காலை ராணிப்பேட்டை, வாலாஜா, ஆம்பூர், ஆற்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 10 மணியாகியும் பால் விநியோகம் செய்யப்படவில்லை. இந்த விஷயங்கள் அனைத்தையும் நாங்கள் பால்வளத்துறை அமைச்சரின் கவனத்திற்கும், ஆவின் நிர்வாகத்தின் கவனத்திற்கும் தொடர்ந்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாகக் கொண்டு செல்கிறோம்.
ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் இந்த தகவல்களை அரசுக்குத் தெரிவித்து வருகிறோம். ஆனால் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான எந்த நடவடிக்கையையும், தமிழக அரசோ, ஆவின் பாலகமோ எடுக்கவில்லை.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ஆவின் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒட்டு மொத்தமாகத் தூக்கிக் கொடுத்து விடும் நடவடிக்கையைச் சத்தமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்களோ என்ற மிகப்பெரிய ஐயப்பாடு நமக்கு எழுகிறது.ஒரு வேளை இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுமாயின், மிகப்பெரிய போராட்டத்தைப் தமிழகம் சந்திக்க நேரிடும். தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.