இந்தோனேசியாவில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசிய கடற்படைத்துறை கன்னியாகுமரியைச் சேர்ந்த மேரி ஜஷிண்டோஸ் (34), டன்போசுகோ (48), முட்னோப்பா (48), பிரவின் (19), லிபின் (34), டோமன் (24), சிஜின் (29) மற்றும் (34), இம்மானுவல் சோ (29) என எட்டு மீனவர்களைக் கைது செய்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்க்கடல் பகுதியில் மீன் பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்தமான் நிக்கோபார் பகுதிகள் வரையும் அரபிக்கடல் வரையும் ஆழ்க்கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம்.
இந்நிலையில் குமரியில் உள்ள தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்களை எல்லைத் தாண்டி வந்து ஆழ்க்கடலில் 18 கடல்வழி ( nautical ) மைல்கள் தாண்டி மீன் பிடித்ததாக இந்தோனேசிய நாட்டு கடற்படைத்துறை இவர்கள் சென்ற விசைப்படகுடன் கைது செய்துள்ளது. மேலும் இவர்களிடமிருந்து மீன் பிடிப்பதற்கான உபகரணங்கள், ஜி பி எஸ், காம்பஸ், மொபைல் போன் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளது.
நேற்று மார்ச் 8 ஆம் தேதி கைது செய்த நிலையில் இந்தோனேசிய நாட்டு நீதிமன்றத்தில் எல்லைத் தாண்டி மீன் பிடித்தற்கான ஆதாரங்களை ஒப்படைத்துள்ளது. மேலும் இவர்கள் எல்லை தாண்டி ஆழ்க்கடலில் மீன் பிடித்தற்கான காரணங்களையும் விசாரித்து வருகிறது.
இலங்கையில் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதால் தமிழக மீனவர்கள் கைதாவது தான் வழக்கம். ஆனால் இந்தோனேசியாவில் ஆழ்க்கடலில் மீன் பிடித்த போது தமிழர்கள் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.