இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால், பொதுமக்கள் அனைவரும்
போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 9-ம் தேதி
அந்நாட்டின் தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். முன்னதாக, அவர் அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, ரணில் விக்ரம சிங்கே இலங்கையின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 16-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடியது. அதில் இலங்கை அதிபர் தேர்தல் வருகிற ஜூலை 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கை தொடர்பாக விவாதிக்க இந்தியாவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி வெளியிட்டுள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதிக்க வரும் செவ்வாய் கிழமை மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இலங்கை விவகாரங்கள் தொடர்பாக விளக்கமளிக்க உள்ளனர் என அந்த அறிவிப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.