இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இன்று ஆறாவது நாளாக போர் நடைப்பெற்று வருகிறது. இரு நாடுகளுக்குள்ளும் நேற்று ஆறு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்தும் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை. நாளாக நாளாக போரின் வீரியம் குறைந்து விடும் என்று எண்ணினால் அதற்கு நேர் மாறாக போரின் வீரியம் அதிகரித்துதான் சென்று கொண்டிருக்கிறது.
ஏற்கனவே, உக்ரைனின் தலைநகரான கீவ் பகுதியை இரஷ்யா நாசமாக்கிய நிலையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் தற்போது இரஷ்யாவின் இராணுவப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் இருந்த இந்திய மாணவர் ஒருவர் கார்கிவ் நகரில் நேர்ந்த தாக்குதலின் போது உயிரிழந்தார். இந்நிகழ்வு இந்திய மக்களை கவலையுறச் செய்துள்ளது.கார்கிவ் நகரில் இருந்து வெளியேற கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த நவீன் என்பவர் இரயில் நிலையத்திற்கு செல்லும்போது அங்கு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வெளியுறவுத்துறை, உயிரிழந்த மாணவனின் பெற்றோருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கிறது. மேலும் உக்ரைன் மற்றும் இரஷ்யா அரசுகள் சம்பந்தப்பட்ட தூதர்களை அழைத்து அங்கிருக்கக்கூடிய இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.