சச்சின் தெண்டுல்கர் – உலகில் கிரிக்கெட் உள்ள வரை நிலைத்து நிற்கும் ஒரு பெயர். இந்திய கிரிக்கெட் வளர்ச்சியில் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் வளர்ச்சியிலும் மிக மிக முக்கியப்பங்கை ஆற்றியவர், சச்சின். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்றாலும், குறைந்தப்பட்சம் வாரம் ஒரு முறையாவது ‘ இந்த தேதியில பத்து வருஷம் முன்ன சச்சின் ஆடுன ஆட்டம் இருக்கே’ என சச்சின் தெண்டுல்கரின் விளையாட்டை குறித்து இணையத்திலும், சக மனிதரிடத்திலும் தீவிரமாய் பேசப்படும் நிகழ்வு அரங்கேறிவிடுகிறது.
இன்றும் அப்படியான ஒருநாள்தான். ஆம்! 2003 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி நடைப்பெற்ற உலக கோப்பை போட்டியில் சச்சின் ஆடிய ருத்ர தாண்டவம் அவ்வளவு எளிதில் எவராலும் மறக்க முடியாதவை. 1992, 1996, 1999 என தொடர்ந்து இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இத்தொடர் தோல்விக்கு பழிவாங்க எண்ணிய பாகிஸ்தான் அணிக்கு எதிராகத்தான் அன்றைய ஆட்டம் நடைப்பெற்றது.
இந்திய அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணி 50 ஓவர்களுக்கு 273 ரன்கள் எடுத்தது. வலுவான ஸ்கோரை எதிர்த்து பேட்டிங்கில் ஈடுபட வந்த இந்திய அணி வீரர்களை கேப்டன் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் ஷோயப் அக்தர் என அவர்களின் வேகப்பந்து வீச்சு தாக்குதல் பயமுறுத்தியது.
ஆனால் தொடக்க வீரர்களாக வீரேந்திர சேவாக்குடன் சச்சின் தெண்டுல்கர் களமிறங்கினார். வாசிம் அக்ரம் முதல் ஓவரை வீச,பந்தின் வேகம் பார்ப்பவர்களையும் பயமுறுத்தியது. ஓரிரு பந்துகளைப் பார்த்த பிறகு, அக்ரமின் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு அடித்தார், சச்சின். அதன் பின் சோயிப் அக்தர் பந்து வீச வர அவரின் பந்தையும் சிக்ஸருக்கும் பவுண்டரிக்குமாய் அனுப்பினார், சச்சின்.
அதேசமயம் மறுமுனையில், வீரேந்திர சேவாக் விரைவில் வெளியேற, அதன்பின் வந்த கங்குலியும் டக் அவுட் ஆனார். நிதானமாகவும் விவேகமாகவும் விளையாடிய சச்சின் தெண்டுல்கர் அவர்கள் 98 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் 12000 ரன்களை கடந்த சாதனையையும் சச்சின் படைத்தார். ஆனால் சச்சின் சதம் அடிக்காமல் பெவிலியன் திரும்பியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. போட்டியின் நிலை குறித்தும் கவலை எழுந்தது. அப்போது ட்ராவிட் மற்றும் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்து 99 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை மீண்டும் ஒரு முறை வீழ்த்த உதவினர்.
பலம் பொருந்திய பாகிஸ்தான் அணியை உலக கோப்பை போட்டிகளில் வீழ்த்த மிக முக்கிய காரணமாக அமைந்தவர் சச்சின் தெண்டுல்கர். மார்ச் ஒன்றாம் தேதிதான் தன் அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தினர், மாஸ்டர் சச்சின் தெண்டுல்கர்.