வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, கடந்த 14-ஆம் தேதி காலை 9 மணியளவில் சிட்டகாங்கில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்பின்பு, இந்திய அணியானது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க, 258 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா டிக்ளர் செய்தது. இதைத்தொடர்ந்து, முதல் டெஸ்டை வங்கதேச அணி வெற்றி பெற 513 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 3-வது நாள் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தது. 10 விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 471 ரன்கள் தேவைப்பட்டன.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற 4-வது நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணியும், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியும் முதல் டெஸ்டின் கடைசி நாளான நேற்று விளையாடினர்.
இதில், வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் மட்டும் சிறப்பாக விளையாடினார். இவர் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, வங்கதேச அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிந்தது. ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இதன்மூலம், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘மரத்தின் வேராக மிஷ்கினின் அந்த பிசாசு இருக்கிறது’ – பிசாசு ஒரு பார்வை..