ஒரு படத்தின் தலைப்பு அந்த கதைக்கு மிக பொறுத்தமாக இருக்கிறது. அதே சமயம் அந்த தலைப்பு அப்படத்திற்கு சரியானது இல்லை என்று தோன்றவும் செய்கிறது. இப்படியான தலைப்பை உடைய படம்தான், பிசாசு!
படம் பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். காலம் காலமாக பிசாசு என்ற சொல்லை எதிர்மறையாகவே புரிந்து உணர்ந்து பழகிய நமக்கு இப்படம் அந்த புரிதலை அடியோடு நொறுக்குகிறது.
தனக்கு என்று வித்தியாசமான கதை சொல்லலை வைத்திருப்பவர் மிஷ்கின். அப்படியாக அவர் மட்டுமே கூறும் அவரின் இயல்பான கதை சொல்லில்தான் பிசாசின் கதையையும் கூறினார். ஒரு துயர சம்பவத்தில் ஆரம்பித்து அதற்கு மாறான துயரத்தில் கதையை முடிக்கிறார், மிஷ்கின்.
பிசாசு படத்தின் அடிநாதம் காதல்! ஒரு மரத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன் மேல் அமராமல் பறந்து கொண்டிருக்கும் பறவை முதலில் மரத்தின் உச்சி தழைகளை காண்கிறது, பின்பு கிளைகள், அதனை தொடர்ந்து அடிப்படையான புவிக்கு மேல் இருக்கும் அடிப்பகுதி. இதையெல்லாம் பார்த்து உணர்ந்த பறவை புவிக்கு கீழே உள்ள வேர்களை மட்டும் பார்ப்பதே இல்லை ஆனால் கிளைகளுக்கும், தழைகளுக்கும் வேர்கள் தரும் ஆற்றலை, அப்பறவை மெதுவாக பின்னரே உணர்ந்து கொள்கிறது. இப்படி உணரும் அந்த பறவையின் சாயலில்தான் பிசாசு படத்தின் கதாநாயக கதாப்பாத்திரம் இருக்கிறது. அந்த மரத்தின் வேராக அந்த பிசாசு இருக்கிறது.
எதார்த்தம் என்ற சொல்லாடலுக்குள் பலர் இப்படத்தை சொருகுகின்றனர் ஆனால் அதில் துளியும் உடன்பாடு இல்லாமல் இப்படத்தை ரசித்தவர்களும் இருக்கிறார்கள். மிஷ்கினின் இந்த கதைப்போக்கை எதார்த்தம் என்று கூறி அமைதிப்படுத்த விருப்பம் இல்லை. அது ஒரு மேஜிக்! மென்மையான காட்சிகளால் துயரத்தை மனதிற்குள் நிகழ்த்தும் பல விந்தைகளை இப்படத்தின் ஆங்காங்கே நாம் காணலாம். கூர்ந்து கவனித்தால், இறப்பெனும் அத்துயர சம்பவத்தில் அவள் புன்னகைக்கிறாள். அவனை நோக்கி அந்த பெண் வீசும் பார்வையில் காதல் என்றும் சொல்லக்கூடிய அந்த உணர்வை நாம் உணரும் தருணம்தான்.. படத்தின் விந்தைகளுக்கான ஆரம்பம்.
இப்படியாக ஆரம்பித்த விந்தை, அதன் பிறகு ஓயவே இல்லை. குறைந்த பட்சம் பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறையாவது விந்தைகள், கதைச் சொல்லலில் நிகழ்ந்து விடுகிறது. அதை நாமும் உணர முடிகிறது. ஓப்பனர் காணமல் போகும்போது, பியர் பாட்டில்கள் உடையும்போது நம்மால் ஒரு உணர்வை உணர முடிகிறது அல்லவா? அதுதான் மிஷ்கினின் கதைச் சொல்லல்.
திரைப்படம் முழவதுமே வழிந்தோடும் இசை படத்தை இன்னும் மேல்நோக்கி உணர்வுப்பூர்வமாய் கொண்டு செல்கிறது. அவனே என் காதலன், அவனே எனை கொன்றவன் என்ற இரு முற்றிலும் வேறுபட்ட உணர்வை முற்றிலும் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வகையில் கூறியமைக்கே மிஷ்கினை நாம் பாராட்ட வேண்டும்.
படத்தின் இறுதி அரைமணி நேரங்களில் வழிந்தோடும் காதலும், இறுதி பத்து நிமிடங்களில் வெளிவரும் உண்மையும் அதனால் நேரும் குற்ற உணர்வும் அதை அன்பால் கையாளும் நிகழ்வுகளும், படம் மீதான விருப்பத்தின் உச்சத்தை வரவழைக்கும் இடங்களாய் மாறிவிடுகின்றன.
2014-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதி வெளியாகிய பிசாசு திரைப்படம் இந்த டிசம்பர் 19-உடன் வெளியாகி எட்டு வருடங்கள் முடிவடைந்துள்ளன. இப்போதும் பிசாசு படம் அதன் அடர்த்தியான மென்மையை இழக்காமல்தான் இருக்கிறது. மிஷ்கின் உருவாக்கி கொண்டிருக்கும் மிஷ்கின் பிசாசு -2 திரைப்படமும், பிசாசு படத்தை மிஞ்சிய படியே இருக்குமென்று எதிர்பார்ப்போம்!
நீதானே என் பொன்வசந்தம்: பத்தாண்டை நிறைவு செய்யும் வருண்-நித்யாவின் காதல் கதை..