இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இலங்கை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது.
கடந்த 3-ஆம் தேதி 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது இருபது ஓவர் போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி இலங்கையை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியை பதிவு செய்தது.
இதைத்தொடர்ந்து, நேற்று புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இரண்டாவது இருபது ஓவர் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால், இலங்கை அணியானது முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.
இலங்கையின் இன்னிங்ஸில் பதும் நிசங்கா 33 ரன்களும், குசல் மெண்டிஸ் 52 ரன்களும் எடுத்தனர். மேலும், சரித் அசலன்கா 37 ரன்களும், கேப்டன் தசுன் ஷனகா 56 ரன்களும் எடுத்து அசத்தினர். இலங்கையை அணியை கட்டுப்படுத்த இந்திய அணி எடுத்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்த வண்ணமே இருந்தன. இதனின் வெளிப்பாடாக இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்த இலக்கையும் இந்திய அணி அடையும் என்று எதிர்பார்க்கையில், இஷான் கிஷண் 2 ரன்களுக்கும், ஷுப்மன் கில் 5 ரன்களுக்கும், ராகுல் திரிபாதி 5 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இருப்பினும், ஒரு புறம் சூர்யகுமார் யாதவ் நிலைத்து ஆடிக்கொண்டிருந்தார். இவருக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்த ஹார்திக் பாண்டியா, தீபக் ஹூடா போன்றோரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் சூர்யகுமார் யாதவ் 51 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து யாரும் எதிர்பாரா வகையில் அக்ஸர் படேல் 65 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால், இந்திய வீரர்கள் எவ்வளவு போராடியும், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்களே எட்டியது. இதனால் இலங்கை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமநிலையில் இருக்கிறது. இந்தத் தொடரின் இறுதி ஆட்டம் நாளை ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்; 100 பேருக்கு தூக்கு தண்டனையா?