ஐ.நா. அமைப்பின் அலுவலக மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
12-வது உலக ஹிந்தி மாநாடு ஃபிஜி நாட்டில் உள்ள நாடி நகரில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தீர்மானம் குறித்த கூட்டமானது, தில்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிறகு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது;
யுனெஸ்கோ அமைப்பில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்படும் செய்தி அறிக்கைகளிலும் சமூக வலைதளப் பதிவுகளிலும் ஹிந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக மத்திய அரசுக்கும் யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
அதே வேளையில், ஐ.நா. அமைப்பில் ஹிந்தி மொழியை அலுவல் மொழியாக்குவது அவ்வளவு எளிதானதல்ல. எனினும், அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐ.நா.-வின் அலுவல் மொழியாக ஹிந்தி இணைக்கப்படுவதற்கு சில காலம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, ஹிந்தி மொழியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆங்கிலம், அரபி, பிரெஞ்சு, ரஷிய மொழி, ஸ்பானிஷ் மொழி, சீன மொழி ஆகியவை மட்டுமே தற்போது வரை ஐ.நா.-வின் அலுவல் மொழியாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகள் ரத்தாகிறதா? ‘இன்னும் 2 நாளில் ரிசல்ட் ‘