போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகள் மீதான தீர்ப்பு வரும் திங்கள்கிழமை அன்று சென்னை உயர் நீதிமன்றம் வெளியிடுவதாக தள்ளி வைத்துள்ளது.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நடைபெற்றபோது போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றினார். அப்போது அந்தத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீதான மூன்று வழக்குகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பு, தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக செந்தில் பாலாஜி இருப்பதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டுதான் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அவற்றை ரத்து செய்யக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.
புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஏழை மக்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் வாதிட்டனர்.
மேலும் காவல்துறை தரப்பில் அமைச்சர் செய்தில் பாலாஜி மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிப்பதாக கூறி நீதிபதி தீர்ப்பை தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: ‘மறைந்து ஒரு வருடமாகிறது’ – புகழ்பெற்ற நடிகருக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்!