நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது 20 ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியினை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐந்து இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா அணியானது இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணியும், ஒரு போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், நேற்று இரவு ஆட்டமாக நடைபெற்ற நான்காவது போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணித்தலைவர் பவுமா முதலில் பந்து வீச்சினைத் தேர்ந்தெடுத்தார்.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், ஏழு பந்துகளை எதிர்கொண்டு ஐந்து ரன்கள் அடித்திருந்த நிலையில் லுங்கி ங்கிடி பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியானது 13 ஓவர்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை எடுத்து இக்கட்டான நிலைமையில் இருந்தது.
கார்த்திக்-பாண்டியா..
இக்கட்டான நிலையில் இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்த போது கூட்டணி சேர்ந்த கார்த்திக்-பாண்டியா ஜோடியானது அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. 33 பந்துகளை எதிர்கொண்ட இந்த ஜோடி, 65 ரன்களைக் குவித்தது.
சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து அசத்தினார். 31 பந்துகளை எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா 46 ரன்கள் எடுத்தார். கார்த்திக், பந்தியாவின் அதிரடியினால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியானது ஆறு விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்திருந்தது.
தென்னாப்பிரிக்கா அணித்தரப்பில் லுங்கி ங்கிடி இரண்டு விக்கெட்டுகளையும், மகாராஜ், நோர்ட்ஜெ, பிரிடோரியஸ், ஜான்சென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்திய பௌலர்களின் பந்துவீச்சு..
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக் கனவினை இந்திய பந்துவீச்சாளர்கள் தகர்த்தனர். சிறப்பான பந்து வீச்சினை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள், தென்னாப்பிரிக்கா அணியினை 87 ரன்களுக்குள் சுருட்டினர்.
சிறப்பாக பந்து வீசிய ஆவேஷ் கான் நான்கு ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யுவேந்திர சஹால் இரண்டு விக்கெட்டுகளையும், அக்சார் படேல் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் எடுத்தனர்.
55 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக்கிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரினை 2-2 என்ற முறையில் சமன் செய்துள்ளது இந்திய அணி. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐந்தாவது போட்டியில் வேற்று பெரும் அணியானது இந்த தொடரினைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இறுதிப் போட்டியானது ஞாயிற்றுக்கிழமை பெங்களுருவில் நடைபெற இருக்கிறது.
உலகின் அதிக வெப்பமான பகுதிகள் எங்கெங்கே! இவ்வளவு வெப்பமா?