கர்நாடகாவில் குடிபோதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், துமாகூர் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக கங்கா லக்ஷ்மம்மா என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் பள்ளிக்கு மது பாட்டில்களைக் கொண்டு வந்து மது அருந்தியப்படி, பாடம் நடத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கண்டித்தும், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் கங்கா லக்ஷ்மம்மா மீண்டும் தனது வேலையை குடிபோதையில் செய்துள்ளார். தொடர்ந்து அவர் மது அருந்திவிட்டு பாடம் எடுத்து வந்ததால், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கங்காவின் வகுப்பறைக்கு சென்ற அவர்கள், மேசை டிராயரில் சோதனை செய்து பார்த்ததில், மதுபாட்டில் இருப்பதை கண்டறிந்தனர். மேலும், கங்கா அப்போது குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
இதன்காரணமாக, அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.