தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக மாறியுள்ளது என்று மேயர் ராமநாதன் தெரவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது, மேயர் ராமநாதன், ஆணையர் க. சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது, அதிமுகவைச் சேர்ந்த கே. மணிகண்டன், ‘தீபாவளி காலத்தில் பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டன. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை எனக் கூறிய நிலையில், எப்படி இக்கடைகள் அமைக்கப்பட்டன. மாநகராட்சி இடத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஆணையர், வியாபாரிகள் அவர்களாகவே கடைகளை அமைத்தனர். இனி வரும் காலங்களில் தீபாவளி காலத்தில் வியாபாரிகள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப, அவர்களாகவே தரைக்கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மேயர் தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளும் கடன் நிலையில்தான் இருந்தன. தஞ்சாவூரில் இதற்கு முன்னால் அதிமுக ஆட்சியில் மாநகராட்சியை நடத்தியவர்கள் நிறைய கடன் சுமையுடன் விட்டுச் சென்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் பொறுப்பேற்ற பிறகு நானும், ஆணையரும், துணை மேயரும் கலந்து ஆலோசித்து திட்டங்களைச் சரியாக செய்ததாலும், ஒப்பந்தப்புள்ளி கோருவதை நேர்மையாக நடத்தியதாலும் இந்த 6 மாதங்களில் கடன் நிலையிலிருந்து, கடன் இல்லா தஞ்சாவூர் மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது.
உலக வங்கியிலிருந்து கடைசியாக வாங்கப்பட்ட ரூ. 5 கோடி முழுவதும் அடைக்கப்பட்டுவிட்டது. இனிமேல் வரும் அனைத்து லாபங்களும், வரி வசூலும் புதிய திட்டங்களுக்கு முழுமையாகச் செலவிடப்படும். பூங்கா, சாலை, பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். மேலும், தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சியைக் கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: யார்ரா நீங்க எல்லாம்…? ஓடும் காரின் மேற்கூரையில் பட்டாசு வெடித்து அட்டூழியம்! வைரல் வீடியோ