தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவ உள்ளதால் சென்னையில் இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டில் உள்ள மாமல்லபுரத்தில் 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இந்தியா முழுவதும் பயணித்து வரும் ஜோதி இன்று சென்னைக்கு வந்தடைந்தது.
இதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 27) சென்னை மாநிலக் கல்லூரி மைதானத்தில் மாலை 4 மணியளவில் தொடங்கும் ஜோதி ஓட்டம் காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, ஆண்ணா சாலை வழியாக இரவு 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜோதி ஓட்டம் நடைபெறவுள்ள சாலைகளில் குறிப்பிட்ட நேரத்தில் வாகன ஓட்டிகள் செல்வதை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு செல்வோர் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாளை (ஜூலை 28) மாலை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள். எனவே சென்னைப் பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜூலை 28 நண்பகல் முதல் இரவு 9 மணி வரையில் இராஜா முத்தையா சாலை, ஈவெரா பெரியார் சாலை, மத்திய சதுக்கம், அண்ணாசாலை (ஸ்பென்சர் சந்திப்பு வரை) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளதாவது :
தேவை ஏற்படுமாயின் டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் இராஜா முத்தைய சாலை வழியாக அனுமதிக்கப்படாது.
ஈவெகி சம்பத் சாலை ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து இராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவெரா சாலை கெங்குரெட்டி சாலை சந்திப்பு, நாயர் பால சந்திப்பு, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது.
பிராட்வேயிலிருந்து வருகின்ற வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், தங்கசாலை, வால்டாக்ஸ் சாலை வழியாக மூலக்கொத்தளம் நோக்கித் திருப்பிவிடப்படும்.
இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாகச் சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம்.
சென்னை மத்திய ரயில் நிலையத்துக்கு வரவேண்டிய பொதுமக்கள் அவர்களது பயணத்திட்டத்தினை முன்கூட்டியேத் திட்டமிட்டுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு பெருநகரப் போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.