திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (ஜூலை 27) காலை அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திமுக அரசு உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளனர். திமுக-வின் 14 மாத ஆட்சியில் விலைவாசி, சொத்துவரி, மின்கட்டணம் என எல்லா வரியும் உயர்ந்துள்ளது.
எங்கள் பிரச்சனைக்கு குரல் கொடுங்கள் என முதன்மை எதிர்க்கட்சியான எங்களிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். உங்கள் (திமுக) ஆட்சி அதிகாரம் எதிர்க்கட்சியை அழிப்பதற்கு அல்ல. மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான். அதிமுக-வின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
தமிழகத்தில் அதிமுக நடத்திய போராட்டத்தை பார்த்து மு.க.ஸ்டாலின் நடுங்கிக் கொண்டிருக்கிறார். அதிமுக-வுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை மறைக்க, எங்கள் கட்சியினர் மீது அவர், பொய் வழக்கு போடுகிறார்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தூங்கி வழிந்த திமுக அமைச்சர்- துக்கமான கடமை