நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என விஜய் மல்லையா திங்கள் கிழமை (ஜூலை-11) கூறியுள்ளார்.
இந்தியாவில் சுமார் 9,000 கோடி ருபாய் வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, கடந்த 2016ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் தஞ்சமடைந்து உள்ளார்.
2017ம் ஆண்டு தனது வாரிசுகளான சித்தார்த் மல்லையா, லீன்னா மல்லையா மற்றும் தான்யா மல்லையா ஆகியோர் வங்கிக்கணக்குகளுக்கு சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 310 கோடி) பணத்தை நீதிமன்ற உத்தரவை மீறி பரிவர்த்தனை செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்ததாகக் கூறியது. மேலும் மல்லையாவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
மேலும், 2017ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மல்லையா தரப்பில் 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.
மல்லையாவை நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக பலமுறை உச்சநீதிமன்றம் வாய்ப்பளித்தது. எனினும் மல்லையா இன்று வரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
மேலும், நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி அன்று உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
நேற்று, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, விஜயமல்லையாவுக்கு 4 மாதம் சிறைத்தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து இங்கிலாந்தில் உள்ள தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளித்த விஜய் மல்லையா, ‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. எனக்கு மிகவும் ஏமாற்றமாய் உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.
எடப்பாடி ஆதரவாளர்கள் 14 பேருக்கு நீதிமன்ற காவல்