அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி, ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளித்து நேற்று காலை (ஜூலை 11) உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த உத்தரவை அடுத்து பொதுக்குழு நடந்த நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் உருவானது.
கலவரமாக மாறிய இந்த மோதலை காவல் துறையினர் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த மோதலை அடுத்து ராயப்பேட்டையில் நேற்று ஒரு நாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மோதலில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பதிவின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக அலுவலக தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேரும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.