விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரை பூஜிக்கும் முறை:
நாம் கடையில் சென்று பிள்ளையாரை வாங்க செல்லும் போது ஒரு தாம்பூலத் தட்டில் சிறிது அரிசி, மஞ்சள், அறுகம்புல் பரப்பி அதன் மீது பிள்ளையார் வைத்து கொண்டு வரவும். மண் பிள்ளையார் மிகவும் நல்லது. அதை வீட்டுக்கு கொண்டு வந்ததும். வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு உள்ளே அழைத்து வர வேண்டும்.கணபதி வந்த உடன் அவருக்கு ஒரு பட்டுத் துணி அல்லது காவி துணி உடுத்தி சிறிது பூ வைத்து வணங்கவும். அவருக்கு சந்தன பொட்டு வைக்கவும். மலர்களால் அலங்காரம் செய்யவும். அவருக்கு பிடித்த அருகம் புல் அல்லது எருக்கம்பூ மாலை செய்து அணிவிக்கலாம்.
அதன் பிறகு பாக்கு, வாழைப்பழம், உள்ளிட்ட பழங்களை வைக்கவும். விநாயகருக்கு பிடித்த அப்பம், கொழுக்கட்டை, மோதகம், பச்சரிசி, முறுக்கு, சுண்டல், பால் பாயாசம் உள்ளிட்ட இனிப்பு வகைகள், பலகாரங்களை செய்து படைக்கலாம்.உங்களால் முடிந்தால் பழங்கள், கம்பு, சோளம் போன்றவற்றையும் வைக்கலாம். ஆவணியில் கம்பும், சோளமும் பசுமையாக விளையக் கூடியவை. அதனால் தான் தொன்றுதொட்டு இவைகள் விநாயகருக்குப் படைக்கப்பட்டு வருகின்றன. எனவே தான் இன்றும் கடைகளில் விநாயகர் சதுர்த்தி அன்று இவைகள் விற்கப்படுகின்றன. தீர்த்தமாக சுத்தமான தண்ணீரில் மஞ்சள் கலந்து வையுங்கள்.
பின்னர் விநாயகருக்காக மும்முறை தோப்புக்கரணம் போட்டு, தலையில் மூன்று முறை குட்டி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் நாம் எந்த தவறுகள் செய்திருந்தாலும் அவர் அதை மன்னித்து, நமக்கு சௌபாக்கியம் தந்தருள்வார் என்பது நம்பிக்கை. விநாயகர் மூன்று நாள் வரை நம்முடைய வீட்டிலேயே தங்க வைத்து, அவருக்கு பிடித்தமானவற்றை மாலையில் நிவேதனம் வைத்து வழிபடலாம். மூன்றாம் நாள் நீர் நிலைகளில் அல்லது கிணறு, தோட்டம் போன்ற பகுதிகளில் அவரை கரைத்து விடலாம்.
விக்னங்களை தீர்க்கும் விநாயகரை விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுபவர்களுக்கு வேண்டிய வேண்டுதல் அப்படியே பலிக்கும் என்பது நம்பிக்கை. விநாயகரை பொருத்தவரை நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை படைத்தால் முழுமனதுடன் அவர் ஏற்றுக் கொள்வார். விரதம் இருக்க முடிந்தவர்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபடலாம் அல்லது சாதாரணமாக விநாயகரை வழிபட்டால் போதுமானது.
எந்த பொருட்களை கொண்டு மாலை செய்யலாம்?
கணபதிக்கு தேங்காய் மாலை செய்து அணிவித்தால் புத்திர பாக்கியம் ஏற்படும். அவருக்கு அறுகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை, கொண்டைக்கடலை மாலை சாற்றலாம். 108 கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊர வைத்து மாலையாக கோர்க்கலாம். இதனால் கஷ்டங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கான பூஜை நேரம்:
- நாளை (31/08/2022) காலை ப்ரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவதாக இருந்தால்,
- காலை 4:00 மணி முதல் 6 மணி வரை வழிபாடு செய்யலாம்.
- 6 மணி முதல் 7:15 மணி வரை வழிபாடு செய்யலாம் .
- 9 மணி முதல் 12 மணி வரை வழிபாடு செய்யலாம்.
- மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்யலாம். மாலை வேலைகளிலும் வழிபாடு செய்யலாம்.
பெண்கள் இருக்கும் வரலட்சுமி விரதமும் அதன் பலன்களும்