புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் பச்சிளம் பெண் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி உள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் மீனவ கிராம கடற்கரை முகத்துவாரத்தில் பச்சிளம் குழந்தையின் உடல் அழுகிய நிலையில் காலை கரை ஒதுங்கியது. இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த மீனவர்கள் அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா மற்றும் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தது பெண் குழந்தை என்பதும், மருத்துவமனையில் பிறந்ததற்கான அறிகுறிகள் உள்ளதால் குழந்தையை கடலில் வீசிச்சென்றது யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து அரியாங்குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் புதிதாக 1,016 பேருக்கு கொரோனா தோற்று பாதிப்பு..!