தமிழ் திரையுலகில் பன்முகத்திறமைக் கொண்டவர்கள் பலர் இருந்தாலும், பலரிலும் தனித்து மேலோங்கி இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். தமிழ் சினிமா வரலாற்றின் ஓப்பற்ற கலைஞன், ஈடு-இணையற்றவன் என்ற முக்கிய பட்டங்களுக்கு சொந்தக்காரர்.
தன்னை மட்டுமல்லாது, தன்னுடன் சேர்த்து பலரையும் முன்னேற்றும் உள்ளம் படைத்தவர் இவர். உலகளவில் தமிழ் சினிமாவை கொண்டுச் சென்றதில், முக்கிய பங்கை ஆற்றி, இன்னமும் வெறோரு தளத்திற்கு தமிழ் திரையுலகை கொண்டுச் செல்ல முற்பட்டுக்கொண்டிருக்கிறார். ‘ஒரு சிறந்த கலைஞன், மேலும் பல கலைஞனை உருவாக்கும் வல்லமை படைத்தவன்’ – என்ற கூற்றுக்கு ஏற்ப பல கலைஞர்களை உருவாக்கியும், அடையாளம் கண்டும் வருகிறார். இவரின் திரைப்பயணத்தை கண்டு திரையுலகிற்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, நடனம், கதை, திரைக்கதை, வசனம், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு முகங்களை ஒருங்கே கொண்ட திரையுலக நாயகன் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். இணையம் முழுவதும் கமல்ஹாசனை கொண்டாடி தீர்த்துக்கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், நாமும் கமல்ஹாசனை கொண்டாடலாம். ஆனால், எந்த தலைப்பின் கீழ் கொண்டாடலாம். பல திறமைகளை தன்னுள் உள்ளடக்கிய கமல்ஹாசன், பாடலாசிரியராக செய்தவை பெரிதும் பேசப்படவில்லையோ என்ற கூற்று அந்நாள் முதல் இந்நாள் வரை இருந்து வருகிறது. ஆம்! அது உண்மையும் கூட. திரையுலகால், ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்படாத கமல்ஹாசனின் திறமைகளில் ஒன்று பாடல் எழுதுவது.
ஹேராம் திரைப்படத்தில் ‘நீ பார்த்த ஒரு பார்வைக்கு ஒரு நன்றி’ என்ற பாடலின் மூலம் தனது பாடலாசிரியர் அவதார்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய கமல்ஹாசன், விக்ரம் திரைப்படத்தில் ‘பத்தல பத்தல’ பாடல் வரை எழுதியிருக்கிறார். வெகுசில பாடல்களையே எழுதியிருந்தாலும், அத்தனையும் தனித்துவம் பெற்றவை. பல பாடலில் பல நல்வரிகளை பொறுத்திய கமல்ஹாசன், உத்தம வில்லன் திரைப்படத்தின் ‘சாகா வரம் போல் சோகம் உண்டா’ பாடலில் அறிவியல், வரலாறு, இலக்கியம், தத்துவம், வாழ்வியல் என அனைத்தையும் மூன்று நிமிட பாடலுக்குள் மிக அழகாய், சுருக்கமாய் அதே சமயம் தெளிவாய் தன் வரிகளால் கூறியிருப்பார்.
இதையும் படிங்க: நடிகர் விஜய் குரலில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’ பாடல்…இனி ஆட்டம்தான்!
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், கமல்ஹாசன் அவர்களே எழுதிப்பாடிய பாடல்தான், இந்த ‘சாகா வரம் போல் சோகம் உண்டா’ பாடல். கதையின்படி, அரசர் ஒருவர் தன் நாட்டின் பிரஜை ஒருவருக்கு சாகா வரம் கிடைத்திருப்பதாக நினைத்து, அந்த வரத்தை தானும் பெற முயற்சி செய்கிறார். அப்போது அந்த சாகா வரம் பெற்ற பிரஜை அரசருக்கு பாடும் பாடலாய் இப்பாடல் அமைந்திருக்கிறது.
சாகா வரம் போல் சோகம் உண்டா?
கேளாய் மன்னா..
தீரா கதையை கேட்போர் உண்டா?
கேளாய் மன்னா..
என கதையின் மன்னனோடு நில்லாமல் இப்பாடலை கேட்கும் நம்மிடமும் சில அறிவியலையும் பகிர நினைத்த கமல்ஹாசன், கணியர் கணித்த கணக்கு படி, ‘நாம் காணும் உலகிது வட்ட பந்து என்றும், வட்ட பந்தை வட்டமடிக்கும் மற்ற பந்தும் போகும் மாண்டே என்றும், மாளா ஒளியாம் ஞாயிரும் கூட மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே என்றும்’ தனது வரிகளின் மூலம், நாம் வாழும் புவியின் வடிவத்தையும், மற்ற கோள்களின் வடிவத்தையும், சூரியன் உட்பட அனைத்து கோள்களும் ஒருநாள் வெடித்து அழிந்துப்போக, நாமும் அழிவோம் என்று கூறுகிறார்.
அவ்வாறு கோள்கள் வெடித்து அழிந்தப்பின்னும், அவைகளில் இருந்து உயிர்கள் மீண்டும் தோன்றும் என்ற அறிவியலை, கரிந்து எரிந்து வெடித்த பின்னும் கொதிக்கும் குழம்பில், உயிர்கள் முளைக்கும் என்ற வரிகளின் மூலம் தெரிவிக்கிறார்.
பின்பு வாழ்வியலையும், காதலையும் கூற நினைத்தவர், கீழ்வரும் வரியில் மிக சுருக்கமாய், எளிமையாய் அதை கூறிச்செல்கிறார்.
விதைத்திடும்
மெய் போல் ஒரு உயிரை
உயிர்த்து விளங்கும்
என் கவிதை விளங்கும்
கவிதை விளங்கும்
விழுங்கி துலங்கிடும்
வம்சம் வாழ
வாழும் நாளில் கடமை செய்ய
செய்யுள் போல் ஒரு
காதல் வேண்டும்
காதல் வேண்டும்
செய்யுள் போல் ஒரு காதல் வேண்டும்.
இவ்வாறெல்லாம் மன்னனை நோக்கி பிரஜையான கமல்ஹாசன் பாட, சாகா வரத்தினைப்பற்றிய புரிதல் அரசருக்கு புரிந்ததோ இல்லையோ பாடலைக் கேட்கும் நமக்கு புரிந்தது. மேலும், ‘வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன், சாவையும் வேண்டி செத்த கதைகள் ஆயிரம் உண்டு’ என பாடலினை முடிக்கிறார், கமல்ஹாசன்!
முன்பே கூறியது போல தமிழ் திரையுலகின் ஓப்பற்ற கலைஞனும், ஈடு-இணையற்றவனுமாகிய கமல்ஹாசனுக்கு தினவாசல் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
இதையும் படிங்க: மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க போகிறாரா விஜய் சேதுபதி? அதுவும் இவர் இயக்கத்திலா? – ‘பலே பலே’