பதப்படுத்தப்பட்ட பரோட்டாவுக்கு விதிக்கப்படும் சேவை வரி குறித்து குஜராத் மேல்முறையீட்டு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பரோட்டாவுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி செல்லும் என உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் அதிகளவு உட்கொள்ளப்படும் உணவு வகைகளில் ஒன்றாக சப்பாத்தி, பரோட்டா போன்றவை இருந்து வருகின்றன. இதில் கோதுமை, மைதாவால் செய்யப்பட்டு பதப்படுத்தி விற்கப்படும் சப்பாத்திகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதே சமயம், கோதுமை மற்றும் மைதா மாவால் பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
இதற்கு எதிராக குஜராத்தின் அகமதாபாதைச் சேர்ந்த வாடிலால் நிறுவனம் தீர்ப்பாயத்தை அணுகியது. அதை விசாரித்த தீர்ப்பாயம், பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டா, சப்பாத்தியைக் காட்டிலும் வேறுபட்டது என்பதால் அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுவது சரியே எனக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கியது. இருப்பினும், இந்த தீர்ப்புக்கு எதிராக வாடிலால் நிறுவனம் மேல்முறையீட்டு ஆணையத்தில் முறையிட்டது.
இதையும் படிங்க:இந்தியாவில் 3ஜி, 4ஜி மொபைல்களின் உற்பத்தி நிறுத்தமா? மத்திய அரசு கூட்டத்தில் நடந்தது என்ன?
இந்நிலையில், மேல்முறையீட்டு ஆணையம் இந்த முறையீடு தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, “பதப்படுத்தி விற்கப்படும் சப்பாத்திகளை அப்படியே உண்ணலாம். ஆனால், பதப்படுத்தி விற்கப்படும் பரோட்டாவை மேலும் சமைத்து மட்டுமே உண்ண முடியும். மாவும் தண்ணீரும் மட்டுமே சேர்த்து சப்பாத்தி, ரொட்டி ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.
பரோட்டாவானது மாவுடன் வெவ்வேறு வகைகளுக்கு ஏற்ப உருளைக் கிழங்கு, உப்பு, எண்ணெய், பருப்புகள் உள்ளிட்டவற்றைச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. எனவே, பதப்படுத்திய பரோட்டாவுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி கோர முடியாது.
வாடிலால் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யும் சப்பாத்தியில் மாவு மட்டுமே உள்ளது. ஆனால், அந்நிறுவனத்தால் விற்கப்படும் பரோட்டாவில் அதன் வகைக்கு ஏற்ப 36 முதல் 62 சதவீத மாவு மட்டுமே உள்ளது. எனவே, பதப்படுத்தப்பட்ட பரோட்டாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பது சரியானதே” என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.