ஏழைகள் மற்றும் தேவையுள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள், கல்வியை வழங்குவது அரசின் நலத்திட்ட நடவடிக்கையாகும். அவை இலவசங்கள் அல்ல என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் இலவசங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குஜராத்தில் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாத உதவித் தொகை போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ள ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டியது அரசின் கடமை. இதை பிரதமர் மோடி எதிர்க்கிறாரா?’ என கேள்வி எழுப்பி வருகிறார்.
இதைத்தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தில்லியில் செய்தியாளர்களிடம் நேற்று (ஆகஸ்ட் 11) வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
தேர்தல் இலவசங்கள் தொடர்பான விவாதத்தை கெஜ்ரிவால் திசை திருப்ப முயற்சிக்கிறார். சுகாதாரத்துக்கும், கல்விக்கும் செலவிடப்படுவதை ‘இலவசம்’ என்று இதுவரை வகைப்படுத்தியதோ, அழைத்ததோ இல்லை.
இவ்விரண்டையும் விவாதத்துக்குள் எடுத்து வருவது விபரீதமான திசைதிருப்பலாகும். ஏழை மக்களின் மனதில் அச்சத்தையும் கவலையும் ஏற்படுத்த கெஜ்ரிவால் முயற்சிக்கிறார்.
தேர்தல் இலவசங்கள் குறித்த நேர்மையான விவாதம் அவசியம். அதில், அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு