பிரபல ரவுடி நீராவி முருகன் திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசாரால் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது பல கொலை, கொள்ளை குற்றங்கள் உள்ள நிலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் நீராவிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். தன் குடும்பத்தினருடன் சாதாரணமாக வாழ்ந்து வந்த இவருக்கு சங்கர் என்பவரின் பழக்கம் ஏற்பட்டபின், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அடிதடி, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 1988 ஆம் ஆண்டு தூத்துக்குடி பஸ் நிலையம் அருகே கொள்ளையடித்து, கொண்டு வந்த நகையைப் பங்கு பிரிப்பதில் செல்வராஜ் என்பவரைக் கொலை செய்தார். அங்கிருந்துதான் அவருடைய குற்ற சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கின. அவரும் தன்னுடைய பெயரை நீராவி முருகன் என மாற்றிக் கொண்டார்.
அதன்பின், முன்னாள் அமைச்சர் ஆலடி கிருஷ்ணா கொலை வழக்கில் முதல் குற்றவாளியான நீராவி முருகன் இரண்டு குண்டர் சட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறையில் பல தாதா மற்றும் ரவுடிகளின் பழக்கம் ஏற்ப்பட்டு இன்னும் துணிச்சலுடன் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். வழிப்பறி செய்வதில் கில்லாடியான இவர் தனக்கென தனி வழிப்பறி ஸ்டைல் எல்லாம் வைத்திருந்துள்ளார். யாரிடம் வழிப்பறி செய்தாலும் தானே தனியாகச் சென்று நகை,பணத்தை பிடுங்கிச் செல்லும் நீராவி முருகன் அதற்கு முன்பே தப்பிச் செல்வதற்கு தேவையான முழுதிட்டத்தையும் தயார் செய்துவிட்டு தான் செல்வாராம்.
இப்படி தொடர்ந்து குற்றசம்பவங்களில் ஈடுபட்ட இவரின் மீது தூத்துக்குடி, திண்டுக்கல் மற்றும் மதுரை பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதனால் போலீசார் இவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் மிகச்சமீபத்தில் ஒட்டன்சத்திரம் அருகே நடந்த கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பது திண்டுக்கல் போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் பழனியில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கிலும் இவரைத் தேடி வந்துள்ளனர். இப்படி பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் ரவுடி நீராவி முருகன் நான்குநேரியில் பதுங்கியிருக்கும் தகவல் அறிந்த திண்டுக்கல் தனிப்படை போலீஸார் உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தலைமையில் நெல்லை விரைந்தனர். அங்கு சென்ற அவர்களுக்கு ரவுடி நீராவி முருகன் களக்காடு சாலையில் தப்பிச் செல்வதாக கிடைத்தத் தகவலின் பேரில், அவரை மடக்கிப் பிடிக்க முயன்றனர்.
அப்பொழுது ரவுடி நீராவி முருகன் தப்பிப்பதற்காக போலீசாரை அரிவாளால் வெட்டியுள்ளார், இதனால் போலீசார் அவரைத் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நீராவி முருகன் அரிவாளால் வெட்டியதில் மூன்று போலீசார் படுகாயம் அடைந்தனர். உயிரிழந்த நீராவி முருகனின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுவுள்ளது.