மூன்றாவது வாரமாக உக்ரைனில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் போர் நிலைமை தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன. ஏற்கனவே பெருவாரியான மக்கள் உக்ரைனை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
நேற்று அதிகாலை முதல் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்யா தொடர் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்டன. இந்நிலையில் நேற்று தலைநகர் கீவ்வில் ஊரடங்கு அமல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி வரும் 17 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு கீவ் பகுதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கின் மொத்த கால அளவானது 36 மணி நேரமாகும்.
சமீபத்தில் அதிபர் செலென்ஸ்கி அவர்கள், உக்ரைன் நேட்டோவில் உறுப்பினராக இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்றும் நேட்டோ அமைப்பில் எங்களால் இணைய முடியாது என்றும் தெரிவித்தது உலக அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இப்படியான சூழலில்தான், போலந்து, ஸ்லோவேனியா மற்றும் செக் குடியரசு தலைவர்கள் செவ்வாய்கிழமை உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் அதிபர் செலென்ஸ்கியை சந்தித்தனர். குடியரசு தலைவர்கள் வருகையின் நோக்கம் “உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கான முழு ஐரோப்பிய ஒன்றியத்தின் தெளிவான ஆதரவை உறுதிப்படுத்துவதாகும்” என்றார், செக் குடியரசு அமைச்சர். நேட்டோ அமைப்பு குறித்து செலென்ஸ்கி கூறிய நிலையில் குடியரசுத்தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுவரை, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எவையும் எட்டப்படவில்லை. இதனால் தொடர்ந்து போர் சூழல் வீரியமாக நீடித்துக்கொண்டே இருக்கிறது.