ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு இன்று (ஜூலை 01) முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுகிறது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசுபடுகிறது. இந்த வகை நெகிழிகள் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாத காரணத்தால் பெருமளவு குப்பைகளாக மாறி வருகின்றன. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இந்த வகை நெகிழிகளைக் கட்டுப்படுத்துவது சற்று சிரமமான காரியமாகவே உள்ளது.
எனவே 2022ம் ஆண்டுக்குள் ஒருமுறை மட்டுமே பயப்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். இந்த இலக்கினை அடையும் விதமாக நெகிழி கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளைக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவித்திருந்தது.
திருத்தப்பட்ட விதிமுறைகளின் படி, ஒரு முறை மட்டுமே பயப்படக்கூடிய நெகிழிப் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் என அனைத்துக்கும் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப்பொருட்கள்:
நெகிழி குச்சிகளுடன் கூடிய பலூன்கள், நெகிழிக் குச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் காது குடையும் பஞ்சுகள், நெகிழியல் உருவான கொடிகள், நெகிழி ஸ்பூன்கள், நெகிழியால் உருவாக்கப்பட்ட கத்திகள், நெகிழித் தட்டுகள், குவளைகள், உறிஞ்சு குழல், சிகரெட் பாக்கெட்டுகள், அழைப்பிதழ்கள் மற்றும் நூறு மைக்ரானுக்கும் குறைவாக உள்ள நெகிழி மற்றும் பிவிசி பேனர்கள் ஆகியவை தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த பொருட்களின் விற்பனைகளைத் தடுக்க ஆவண செய்யுமாறு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் நெகிழிப் பயன்பாட்டினைக் குறைக்கும் இந்த நடவடிக்கையில் மக்களுக்கு அதிகாரம் அளிக்க குறைதீர்ப்பு செயலி ஒன்றினை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த ‘பிரக்ரித்தி’ என்ற இலச்சினை ஒன்றினையும் வெளியிட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
யார் அடுத்த முதல்வர்? பரபரப்பின் உச்சத்தில் மகாராஷ்டிர அரசியல்..