நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத்தொடரின் 6-வது நாளான இன்று(ஜூலை 25) இரு அவைகளும் மதியம் 2 மணிக்கு துவங்கியது.
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக, திரௌபதி முர்மு இன்று காலை பொறுப்பேற்றதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று மதியம் இரண்டு மணிக்கே தொடங்கியது.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடந்த அனைத்து கூட்டத்திலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். விலை உயர்வு, வேலையின்மை, பணவீக்கம், அக்னிபாத் திட்டம், குறித்து விவாதிக்க வலியுறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சியினர் பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து கூட்டத்தொடரின் இரு அவைகளும் மாலை 3 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபடுவது குறித்து பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ‘எதிர்க்கட்சி உறுப்பிப்பினர்கள் விவாதம் நடத்த விரும்பினால், அதற்கு நானும் தயார். அவைக்குள் பதாகைகளை காட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், 3 மணிக்கு மேல் அவைக்கு வெளியேயும் காட்டலாம். இந்த நாட்டு மக்கள் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் நடக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.’ எனக் கூறி மக்களவையை 3 மணி வரை ஒத்திவைத்தார்.
எனினும், ஜிஎஸ்டி வரி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக்கோரி, அவைக்கு வெளியேயும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்ததால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவையைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், தமிழக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, டீ.என்.பிரதாபன் ஆகியோர் மழைக்காலத்தொடர் முழுவதிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இடைநீக்கம் செய்தது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்,
‘ நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களுக்காக பேசியதற்காக நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுளோம். இருப்பினும் நாட்டு மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து பேசுவோம். நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துகள் நாடாளுமன்றத்தில் மறுக்கப்படுகிறது. மோடி ஜி வாழ்க, அமித்ஷா ஜி வாழ்க கோஷங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ராகுல் காந்தி உள்பட, எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்துக்குள் பதாகைகள் கொண்டு வரக்கூடாது என கடந்த வாரம் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
பாஜகவால் இந்திய அரசியல் அமைப்புக்கு பெரும் ஆபத்து- தொல்.திருமாவளவன்