அனைத்து அரசியல் சாசன அமர்வுகளின் விசாரணை நிகழ்வுகளும் இன்று முதல், நேரலையாக வெளியிட உச்சநீதிமன்றம் முடிவு.
மராட்டிய மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, சிவசேனா அதிருப்தி அணியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார்.
அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க முடிவு விவகாரம், சபாநாயகர், கவர்னரின் அதிகாரங்கள் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே அணியினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் 3 அரசியல் சாசன அமர்வுகளில், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 2-வது அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கின் விசாரணை இன்று (செப்டம்பர் 27) நடந்தது. இந்த விசாரணை காட்சிகளை நேரலை நிகழ்ச்சியாக உச்சநீதிமன்றம் வெளியிட்டு உள்ளது.
இதையும் படிங்க: தொடரும் மாணவர்களின் ‘ஸ்டண்ட்’ அட்டூழியங்கள்; ஓடும் பேருந்தில் சாகசம் செய்த மாணவர் கைது
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு நேற்று கூறும்போது, யூ-டியூப் பயன்படுத்தி பார்ப்பதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளை நேரலை நிகழ்வாக காண்பதற்கான தளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி, அனைத்து அரசியல் சாசன அமர்வுகளின் விசாரணை நிகழ்வுகளும் இன்று முதல், நேரலையாக வெளியிட உச்சநீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது.
இருப்பினும், யூ-டியூப்பில் நீதிமன்ற நிகழ்வுகளை நேரலையாக வெளியிட்டு, பின்னர் அவற்றை நீதிமன்றம் தனது சர்வரில் (server) வைத்து, அதன் வழியே வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தங்களது மொபைல் போன்கள், கணினிகளின் வழியே தடையின்றி காண இயலும்.