இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் நெஞ்சில் குண்டடிபட்ட ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
ஜப்பான் நாட்டில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ள மேல்சபைத் தேர்தலையொட்டி, ஜப்பான் நாட்டின் நாரா நகரத்துக்கு இன்று காலை பிரசாரத்துக்கு சென்ற ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டார். அந்த பகுதியில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின்படி இரண்டு முறை குண்டு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
பிரசாரம் நடைபெற்ற நாரா பகுதியில் வசித்து வரும் டெட்சுயா யமாகாமி எனப்படும் நபர் சுட்டதாக கருதப்படுகிறது. அவரைக் கைது செய்த ஜப்பான் நாட்டு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெஞ்சுப் பகுதியில் குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. ஜப்பான் நாட்டு நேரப்படி மாலை 5:03 மணியளவில் சிகிச்சை பலனின்றி ஷின்சோ அபே உயிரிழந்தார்.
நெஞ்சில் குண்டு பாய்ந்ததால் அதிக அளவு ரத்தம் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் ரத்தக் கசிவை நிறுத்த முடியவில்லை என செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், ஷின்சோ அபேவின் நெஞ்சில் பாய்ந்த குண்டு அவரது இதயத்தினை பாதிக்கும் அளவுக்கு உள்ளே சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை ஒரு நாள் தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் பிரதமராக 9 வருடங்கள் பதவியில் இருந்த ஷின்சோ அபே, அந்நாட்டில் அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்கிற பெருமையை பெற்றுள்ளார். உடல் நலம் கருதி 2020ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொண்ட ஷின்சோ அபேவுக்கு வயது 67 ஆகிறது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு