அதிமுக அலுவலகத்துக்குள் சில சமூக விரோதிகள் நுழைந்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இன்று சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார்.
பொதுக்குழு கூட்டத்தின்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது. இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ராஜிவ் காந்தி மருத்துவமனை சென்று அதிமுக தொண்டர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழையக் கூடும் என காவல்நிலையத்தில் மனு கொடுத்திருந்தோம். மேலும், அதிமுக தலைமை கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரினோம்; ஆனால், காவல்துறையினர் முழுமையான பாதுகாப்பு வழங்கவில்லை.
அதனால், அதிமுக அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அதிமுக கட்சியின் தலைவராக இருந்தவர், முன்னாள் துணை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்; அவரே ரௌடிகளை அழைத்துக் கொண்டு வந்து கட்சியின் நிர்வாகிகளைத் தாக்கியுள்ளார். ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் இப்படி செய்யலாமா?
இது குறித்து அதிமுக சார்பில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளார். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களும் அதிமுக தொண்டர்களையே தாக்கியுள்ளனர். ரௌடிகளைத் தாக்கவில்லை. காவலர்களுடன் கூட்டு வைத்துக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காலம் மாறும் போது தக்க பாடம் புகட்டுவோம். இவ்வாறு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரமாக்கியது ரஷ்யா