சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.
தற்போது தீவிர புயலாக இருக்கும் மாண்டஸ் இன்னும் 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை உள்ளிட்ட 28 மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக சென்னைக்கு நீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பி வருகின்றன. மேலும் சென்னையைச் சுற்றியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் ஏரிகளுக்கு நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இன்று நண்பகல் 12 மணி அளவில் உபரி நீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு தற்போது 140 கன அடி அளவில் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து 100 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
ஏரிகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட உள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!