கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த முதல்வருக்கு திமுக ஒத்துழைப்பு தரும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி திமுக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் நலிவடைந்ததற்கு அதில் பணிபுரிந்த ஊழியர்களே காரணம் என்று முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். உண்மையில் ஊழியர்கள் மட்டுமே காரணமா, அந்நிறுவனங்கள் நலிவடைந்ததற்கு யார், யாருக்கு பெரும்பான்மையான பங்கு உள்ளது என்பதை புதுச்சேரி மக்கள் அனைவருமே அறிவர்.
அந்த நிறுவனங்கள் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதில் இருந்து பாதை மாற்றப்பட்டது, அளவிற்கு மீறி ஆட்களை நியமித்தது, அரசுக்கு தேவையான பொருட்களை அந்நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து அதற்குரிய பணத்தை அரசுத்துறைகள் வழங்காமல் இருப்பது, வாரிய தலைவர்களை நியமித்து நிறுவன சொத்துக்களை சூறையாடியது, நிறுவன வரவு செலவுகளை ஆண்டுதோறும் தணிக்கை செய்யாதது உள்ளிட்டவைகளே முக்கிய காரணம்.
லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அந்த மில்லை திறக்காமல் உள்ளது. தற்போதாவது அமுதசுரபி, பாப்ஸ்கோ, பாண்லே ஆகிய நிறுவனங்களின் வரவு செலவுகளை உடனடியாக தணிக்கைச் செய்ய வேண்டும்.
கூட்டுறவுத்துறையை இதுவரை விரும்பி எடுத்தவரும் முதல்வர் ரங்கசாமிதான். தற்போது விருப்பமின்றி வைத்திருப்பதும் முதல்வர் ரங்கசாமிதான். கூட்டுறவுத்துறைகள், அரசுத்துறைகள் அனைத்தையும் முன்னேற்ற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி தற்போது நினைப்பது போல் தெரிகிறது. அது உண்மையாக இருந்தால், அதற்கு எதிர்க்கட்சி என்ற முறையில் திமுக முழு ஒத்துழைப்பு தரவும் தயாராக உள்ளது.
எனவே சீரழிந்துள்ள கூட்டுறவு மற்றும் அரசுத்துறை நிறுவனங்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதில் எந்தெந்த நிறுவனங்கள் மேம்படுத்த வாய்ப்பு உள்ளது என்று அடுத்த பட்டியலை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்னர் தேர்வு செய்த நிறுவனத்தில் எவ்வளவு ஆட்கள் நீக்கப்பட வேண்டுமோ அவ்வளவு பேரையும், உரிய நிவாரணம் வழங்கி நீக்க வேண்டும். அதற்கடுத்து தேவைப்படும் நிதியை ஒதுக்கி கொடுத்து, தேவைப்படும் தொழில்நுட்ப, வியாபார நுணுக்கம் தெரிந்தவர்களையும் நியமித்து இயக்க வேண்டும். முக்கியமாக அரசியல் குறுக்கீடுகள் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலேயே மாகி பிராந்தியத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு எதனால் கூட்டுறவு நிறுவனங்கள், சிறப்பாக செயல்படுகின்றது என்பது குறித்து ஆய்வு செய்து, அதன்படி புதுச்சேரி பிராந்தியத்திலும் கூட்டுறவுத் துறை நிறுவனங்களை செயல்பட வைத்து லாபத்திற்கு கொண்டுவர வேண்டும். இதன் மூலம் கூட்டுறவுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் நிர்வாக கோளாறால் பின்தங்கிய நிலை ஏற்பட்டதற்கும், அதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சம்பளத்தை இழந்து தவிப்பதற்கும் உள்ளாக்கியதற்கும் பிரயாசித்தம் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ரங்கசாமியை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகளிர் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை…