தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திமுக நிர்வாகி சைதை சாதிக் மேடையில் பெண்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையாகியது. அவர் பேசியதாவது, பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள். குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி. நாங்கள் (திமுக) கட்சி வளர்த்தபோது, சீதாபதி, பலராமன், டி.ஆர்.பாலு என தற்போது இளைய அருணா (திமுகவின் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர்) வரை கட்சி வளர்க்கிறார்கள். ஆனால், பாஜகவில் தலைவர்களைப் பார்த்தால் எனக் கூறி சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார்.
இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக நிர்வாகியின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் வெளிவந்தன. சைதை சாதிக் பேச்சுக்கு குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்து அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு அவர் டேக் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து, குஷ்புவின் கண்டனத்திற்கு கனிமொழி பதில் அளித்து மன்னிப்பும் கோரினார். கனிமொழியின் மன்னிப்பு பதிவுக்கு குஷ்பூ நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சைதை சாதிக் மீது கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முன்னாடி.. பின்னாடி..? காரில் பயணிப்பவர்கள் கவனத்திற்கு! மீறினால் கதை கந்தல்தான்