நடிகர் அஜித்குமாரின் மேனஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்குமார் கூறியதாக ஒரு வசனத்தை பதிவிட்டுள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் மூன்றாவது முறையாக நடிகர் அஜித்குமாரை இயக்கும் திரைப்படம்தான், துணிவு. இவர்களின் கூட்டணியில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் ‘துணிவு’ தரமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
துணிவு திரைப்படத்தின் அப்டேட்டுகள் ஒவ்வொரு முறை வெளிவரும்போதும், ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் செல்கின்றனர். பின்பு, துணிவு திரைப்படம் எப்போது திரைக்கு வருமென்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
அவ்வபோது, பொங்கல் வெளியிடாக துணிவு திரைப்படம் திரைக்கு வருவதாக அறிவித்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்திலேயே இருந்தனர். இந்நிலையில், தற்போது துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, துணிவு திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமாரை கலந்துக்கொள்ள வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பொதுவாகவே, எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும், திரைப்படம் சார்ந்த புரோமஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளாமல் இருந்து வந்த அஜித்குமார் துணிவு திரைப்படத்தின் புரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வாரா? மாட்டாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
மேலும், அஜித்குமார் துணிவு திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஒப்புக்கொண்டால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்நிகழ்ச்சியானது நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் மேனஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்குமார் கூறியதாக ஒரு வசனத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘ஒரு நல்ல திரைப்படம் தானாகவே தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“A good film is promotion by itself!! – unconditional love!
Ajith— Suresh Chandra (@SureshChandraa) October 31, 2022
இதன்மூலம், அஜித்குமார் துணிவு திரைப்படத்தின் ப்ரீ-ரிலிஸ் நிகழ்ச்சிக்கு வருகைத்தர மாட்டார் என்பது தெரியவந்துள்ளது. இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், அஜித்குமாரின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
துணிவு திரைப்படத்தை மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடவுள்ளது. மேலும், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் பொங்கலன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகைகள் குறித்து சர்ச்சை பேச்சு : தி.மு.க. பேச்சாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு