புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி, இந்தாண்டு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், அதற்கு முந்திய நாட்களில் மக்கள் அவரவர் ஊருக்கு பயணம் மேற்கொள்வர்.
அந்த வகையில் புதுச்சேரியில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்காக புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனிடையே, புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட பல ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தீபாவளிக்கு முன்தினம் புறப்பட்டு செல்லும் பயணிகள், இன்று முதல் பேருந்து முன்பதிவை தொடங்கலாம் என தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.