கோல்டு திரைப்படம் குறித்து மணீஷ் நாரயணன், பரத்வாஜ் ரங்கன், ப்ளு சட்டை மாறன் போன்றோர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய ஆவலுடன் உள்ளதாக அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படம், பிரேமம். மூன்று பருவங்களில் நிகழும் காதல் கதையை மிகவும் அழகாக பிரேமம் திரைப்படம் காட்சிப்படுத்தியது. மலையாளத்தில் வெளிவந்திருந்தாலும், இந்திய அளவில் பிரேமம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பிரேமம் ஓடியது.
மாபெரும் வெற்றிப் பெற்ற பிரேமம் திரைப்படத்தை, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். பிரேமம் திரைப்படத்திற்கு முன்பாக, இவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படியாக நேரம், பிரேமம் என இரு வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அல்ஃபோன்ஸ் புத்திரன் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு ‘கோல்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்டு’, பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
இதைத்தொடர்ந்து. கோல்டு திரைப்படமானது கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டு அதன்படியே ரிலீஸானது. மேலும், சென்னையில் பல திரையரங்குளில் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டு, அதையடுத்த காட்சிகள் ஒளிபரப்ப பட்டன. ஆனால், வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களையே அதிகளவில் பெற்று வருகிறது.
இந்நிலையில், கோல்டு திரைப்படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், நான் மணீஷ் நாரயணன், பரத்வாஜ் ரங்கன், ப்ளு சட்டை மாறன் போன்றோரின் விமர்சனங்களுக்கு காத்திருப்பதாகவும், என்னுடைய உழைப்பிற்கு இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்துக்கொள்ள ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா; 51 நாடுகள் பங்கேற்பு