சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட வந்த பெண்ணை சாதி பெயரை சொல்லி திட்டியதாக தீட்சிதர்களை காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் சிவ ஸ்தலங்களில் ரொம்பவும் விசேஷமானது. அங்கே தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நடராஜர் கோயிலில் சஸ்பென்ட் செய்யப்பட்ட கணேஷ் தீட்சிதர் என்பவர் சில தினங்களுக்கு முன்பு சாமி கும்பிட சென்ற போது சக தீட்சிதர்களால் தடுத்து தாக்கப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்தார்.
இதன்பேரில் மூன்று தீட்சிதர்களின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் மறுநாள் அவரது மகனான தர்ஷன் தீட்சிதர் என்பவர் சிதம்பரத்தை சேர்ந்த ஜெய்ஷீலா என்பவரை, சாமி கும்பிட கனகசபை என்னும் சிற்றம்பல மேடை மீது அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் அந்த அப்பெண்ணை தடுத்து நிறுத்தி சாதி பெயர் சொல்லி திட்டியதாக அவர் சிதம்பர நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து 20 தீட்சிதர்களின் மீது கூட்டமாக சேர்ந்து தடுத்தல், தாக்குதல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று கணேஷ் தீட்சிதர் மற்றும் அவரது மகன் தர்ஷன் தீட்சிதர் கோயிலுக்குள் சாமி கும்பிட சென்ற போது சகா தீட்சிதர்கள் மீண்டும் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை என்னும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட வேண்டும் என்பதே என் ஆசை என்று தர்ஷன் தீட்சிதர் தெரிவித்திருந்தார். சோழர்கள் கட்டிய நடராஜர் கோயிலில் கனக சபை மீது யாரும் ஏறக்கூடாது என்று தீட்சிதர்கள் எவ்வாறு கூறலாம் என்று கேள்வி எழுப்பினார். கடந்த காலங்களில் சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட சிவனடியார் அறுமுகசாமியால் வழக்கு தொடரப்பட்டு அனுமதி பெற்று பாடி வந்த நிலையில் மீண்டும் அந்த சிற்றம்பல மேடையால் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. தற்போது தீட்சிதர்களால் நடத்தப்பட்டு வரும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களிடையே மோதல் வெடித்துள்ள சம்பவமும் இதனுடன் தீட்சிதர்களின் மீது தொடர் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவதும் சிதம்பரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.