மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியதும், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தததும் நாம் அறிந்ததே!
இப்படியான சூழலில்தான், இன்று சுற்றுப்பயணத்தின் அடுத்த கட்டமாக இருபது ஓவர் போட்டிகள் தொடங்க உள்ளது. அதன்படி, மூன்று இருபது ஓவர் போட்டிகளை கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்தியாவை பொறுத்த வரையில் காயம் காரணமாக லோகேஷ் ராகுலும், தசைப்பிடிப்பால் வாஷிங்டன் சுந்தரும் நடைபெற இருக்கும் டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளனர். இதனால் இஷான் கிஷன் தொடக்க வீரராக ஆடுவார் என்றும், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது புதுமுக வீரர் ரவி பிஷ்னோய் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருபது ஓவர் போட்டிகளை பொறுத்தமட்டில் மேற்கிந்திய தீவுகள் அணி எப்போதும் பலம் பொறுந்திய அணியாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரை கூட 3-2 என்ற கணக்கில் வென்றது.
ஒருநாள் தொடரில் நேர்ந்த ஒயிட்வாஷ்க்கு பதில் தரும் விதமாகவே மேற்கிந்திய தீவுகளின் ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கொடுத்த அடியை திருப்பிக்கொடுக்கும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணி தயாராகி வருகிறது. ஆதலால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே பலரின் கூறலும் இருக்கிறது.