ஆஸ்கர் விருதை வழங்க உள்ள நபர்களின் பெயர் பட்டியலில் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார்.
திரையுலகில் மிக உயரிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் விருது. இந்த விருது வழங்கும் விழாவானது, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வருகிற மார்ச் – 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவாகும்.
இந்த விழாவில் இந்தியா சார்பில், ஆஸ்கர் விருதுக்கான சிறந்த பாடலுக்கான சார்பில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலும், ஆவணப்படம் பிரிவின் பரிந்துரை பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சௌனாக் சென் இயக்கிய ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ படமும், குறு ஆவணப்படம் பிரிவில் கார்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படமும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருதை வழங்க உள்ள நபர்களின் பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது. இப்பட்டியலில் பாலிவுட் உச்ச நட்சத்திரம் தீபிகா படுகோன் பெயர் இடம் பெற்றிருக்கிறது. இதனால், ஆஸ்கர் விருதை பெறுவதில் மட்டுமல்ல, ஆஸ்கர் விருதை வழங்குவதிலும் இந்தியர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர்.
மேலும், ஆஸ்கர் விருது ஏற்பாட்டாளர்கள் தரப்பில் வெளியான பட்டியலில் ஹாலிவுட் பிரபலங்களான தீபிகாவுடன் ட்வெய்ன் ஜான்சன், மைக்கேல் ஜோர்டன், சாமுவேல் ஜாக்சன் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, கடந்தாண்டு டிசம்பரில் நிறைவடைந்த ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான பரிசுக் கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிக்கும் தீபிகா படுகோன் அழைப்பின் பேரில் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
கலைநிகழ்ச்சிகளுடன் இன்று தொடங்குகிறது டபிள்யுபில்..