சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தின் டயர் வெடித்ததில் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு சென்றது. பிறகு, அங்கிருந்து மயிலாடுதுறை செல்வதற்காக பேருந்து நின்று கொண்டிருந்த நிலையில் அப்போது திடீரென பேருந்தின் பின்பக்கமாக இருந்த டயர் அதீத சத்தத்துடன் வெடித்தது.
இதைத்தொடர்ந்து, பேருந்து தீ பற்றி எரியத் தொடங்கியது. இதன் காரணமாக பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கி ஓடினர். மேலும் அருகில் இருந்தவர்களும் அங்கிருந்து ஓடிச் சென்றனர்.
இதையடுத்து, டயரில் பற்றி எரிந்த தீ, மளமளவென பேருந்து முழுவதும் பரவி முழுவதுமாக எரிந்தது. இதன்காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பயணிகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து சிதம்பர நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடலூரில் வெள்ள பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு: நிவாரண உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்