கியூபா நாட்டில் நேற்று சக்தி வாய்ந்த புயல் அடித்ததால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் இருள் நிலவியது.
கரீபியன் நாடான கியூபாவின் மேற்கு பகுதிகளை நேற்று முன்தினம் ‘இயன்’ என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இதன்காரணமாக மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசியது.
இந்தப் புயலால் அந்த நாட்டின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் சேதம் அடைந்தன. இதனால், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் பாதிக்கப்பட்டது. மின் உற்பத்தி இன்மையால் ஒட்டுமொத்த நாடுமே நேற்று இருளில் மூழ்கியது.
அந்த நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இயன் புயலுக்கு நாட்டில் 2 பேர் பலியானதாகவும், மிகப்பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், புளோரிடா பகுதியில் சுமார் 2.5 மில்லியன் மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
‘இயன் புயல்’ புளோரிடாவின் மேற்கு கடற்கரையைக் கடக்கும் நேரத்தில் நான்காவது வகை சூறாவளியாக மாறலாம். காற்றின் வேகம் மணிக்கு 130 மைல் என இருக்கலாம். 30 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வடிவேலு பட பாணியில் ‘அரசு மருத்துவமனையை காணவில்லை’ என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு