தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதி தமிழகத்தின் மொத்த பாதிப்பு 22 ஆக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து மெல்ல அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரே நாளில் 476 பேருக்கு பரவியது. 3 மாதத்திற்கு பிறகு நேற்று உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஜூன் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த கட்டுப்பாடுகளின் படி, வழக்கறிஞர்கள், வழக்காடிகள், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும், தனி மனித விலகலை பின்பற்ற வேண்டும், கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் வழக்காடிகள் தவிர மற்றவர்கள் உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், உயர் நீதிமன்ற கட்டிடத்துக்குள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தலைமைப் பதிவாளர் தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் கட்டாயம் அணிந்து வந்தால் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் அனைத்து பகுதியிலும் ‘நோ மாஸ்க், நோ எண்ட்ரி’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. கண்டிப்பாக பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியரின் சாதிப்பேச்சு: கண்டனம் தெரிவித்த கமல்ஹாசன்!