குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்ததில் உயிருக்கு போராடிய பள்ளி மாணவன் 22 நாள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று உயிரிழந்தான்.
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகில் மெதுகும்மல் என்ற பகுதியை சேர்ந்தவர் சுனில். இவரது மகன் அஸ்வின் இவருக்கு வயது 11. அஸ்வின், அதங்கோடு தனியார் பள்ளியில், 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மாதம் 24 ஆம் தேதி, இந்த பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டது. அன்றைய தினம் அஸ்வினுக்கு காய்ச்சல் வந்தது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. 2, 3 நாட்களில் காய்ச்சல் அதிகரித்தது.
மேலும் அஸ்வினுக்கு வயிற்று வலி, ஜீரண கோளாறு, வாந்தியும் மூச்சு திணறலும் ஏற்பட்டதால் மிகவும் சிரமப்பட்டு வந்தான். நாக்கு பகுதியும் வெந்தது போல் மாறியதை அடுத்து, அஸ்வினை உடனடியாக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனுக்கு வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது வாயில் இருந்து குடல் வரை வெந்து போனது போல் இருந்தது தெரியவந்தது. ஆசிட் போன்று ஏதோ திரவத்தை குடித்ததால் இது மாதிரி பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள்தெரிவித்தனர்.
மேலும் சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில் இருந்ததால், டயாலிசிஸ் சிறுவனுக்கு செய்யப்பட்டது. அஸ்வினிடம் கேட்ட போது, தேர்வு முடிந்த அன்று பள்ளியின் கழிவறைக்கு சென்றதாகவும், அங்கு நின்ற மற்றொரு மாணவன், வலுக்கட்டாயமாக குளிர்பானத்தை கொடுத்து குடிக்க வைத்ததாகவும் தெரிவித்தான். அந்த குளிர்பானத்தில் தான் ஆசிட் கலந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக களியக்காவிளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் எந்த வித துப்பும் கிடைக்காததால் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் இதுகுறித்து விசாரணை நடத்தும்படிமாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு அளித்தனர்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அஸ்வின், 22 நாளுக்கு பிறகு நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தான்.
இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்த அஸ்வினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
மாணவன் அஸ்வினுக்கு ஆசிட் கலந்த குளிர்பானத்தை கொடுத்தது யார்? என்பது பற்றி இன்னும் தெரியாத நிலையில், அஸ்வின் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாணவியை கொலை செய்த வழக்கு; 2-வது நாளாக சிபிசிஐடி விசாரணை