தங்கள் எல்லைக்குள் இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 9 ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவான் செக்டரில் உள்ள யங்ச்சி என்ற பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைய முற்பட்டன.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய வீரர்கள் சீன படையுடன் மோதலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சீன படையை இந்திய ராணுவ வீரர்கள் விரட்டி அடித்தனர்.
இதனிடையே இந்திய படைகள் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக சீன அரசு குற்றம் சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சீன ராணுவத்தின் மேற்கு பிரிவு செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை சீன-இந்திய எல்லையில் சீனாவுக்கு அருகில் உள்ள டாங்ஹங் பகுதியில் உண்மை எல்லைக்கோடு பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, இந்திய வீரர்கள் அத்துமீறி எல்லையைக் கடந்து சீன வீரர்களை தடுத்தனர்.
அந்த சூழ்நிலையை சீனப்படைகள் மிகவும் தொழில்முறையில், நிலையான மற்றும் சக்திவாய்ந்த நடவடிக்கை மூலம் எதிர்கொண்டனர். தற்போது அந்த பகுதியில் இருந்து இந்திய-சீன படைகள் விலக்கப்பட்டு உள்ளன. இந்தியா தங்களது எல்லை பாதுகாப்பு படை வீரர்களை கண்டிப்புடன் கட்டுப்படுத்த வேண்டும். எல்லையில் அமைதியை பேண இந்தியா சீனாவுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியா – சீன படைகள் மோதல் குறித்து அறிந்ததாகவும் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரிக்காமல் பதற்றம் தணிய அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மெஸ்ஸி..