திமுக வட்டச் செயலாளர், விசிக கவுன்சிலரை அடிக்கப் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிர மழை பெய்து வருகிறது. மாநில தலைநகர் சென்னையிலும் பலத்த மழை பெய்து வருவதால், ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளன. பல இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, மழைநீரை அப்புறப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அசோக் நகர் 135-வது வார்டில் திமுக வட்ட செயலாளர் ஒருவர் மழை சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்றார். அப்போது, அசோக் நகர் 135-வது வார்டுக்குரிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் சாந்தி மழைநீர் சூழ்ந்த பகுதிக்கு தாமதமாக வந்தார். அப்போது, சாந்திக்கும், வட்டச்செயலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் வட்டச்செயலாளர் சாந்தியை நோக்கி, ‘காலையிலிருந்து எங்க போயிருந்த… இதெல்லாம் சரி பண்ணாம எங்க போயிருந்த… வசூல் பண்ண போயிருந்தியா… ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செஞ்ச…” என தடித்த குரலில் கேட்டார்.
இதற்கு சாந்தி ”சும்மா ஒன்னும் ஓட்டு போடல பணம் கொடுத்ததால் ஓட்டு போட்டார்கள்” என்றார். இதைத்தொடர்ந்து, வாக்குவாதம் முற்றியது. இந்நிலையில், “நாங்கள் மக்கள் காலில் விழுந்து உனக்கு ஓட்டு வாங்கித் தந்தோம்” என்று கூறியபடி திமுக வட்டச் செயலாளர் திட்டியதோடு அடிக்கவும் பாய்ந்துள்ளார். இதுச்சார்ந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், நிவாரணப் பணிகளை மேற்கொண்ட போது, தன்னையும் தன்னுடைய ஆட்களையும் திமுக வட்டசெயலாளர் செல்வகுமார் செருப்பால் அடிக்க வந்ததாக கவுன்சிலர் சாந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள்! காற்று மாசால் தில்லி சுகாதாரத்துறை அதிரடி